போலீஸ்காரர்கள், செல்லூர் திருடன் அழகரின் வீட்டைக் கண்டுபிடித்து விட்டனர். அரசு, சாமி, வேல், அன்பு என நான்கு பேர் கொண்ட போலீஸ் படை 'மப்டியில்' அழகர் வீட்டை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அன்று தீபாவளிப் பண்டிகை. அந்தத் தெருவில் உள்ள மக்கள் எல்லோரும் கொண்டாட்டத்தின் உச்சிக்கு சென்றீருந்தார்கள். சின்னக்குழந்தைகளின் கைகளில் மத்தாப்பூ சிரித்துக்கொண்டிருந்தது. ஆங்காங்கே, சங்குச் சக்கரங்கள் அழகாக தரையில் சுத்திக் கொண்டிருந்தன. புஸ்..; என்ற சத்தத்துடன் ராக்கெட்டு விண்ணைக்கிழித்துக் கொண்டு சென்றது. வெடிச்சத்தங்கள் அந்தத் தெருக்களை அதிரச்செய்தன.
அந்த நேரத்தில், அழகர் வீட்டை விட்டு வெளியே வந்தான். போலீஸ்காரர்கள் உசரானார்கள். அவன் வீட்டிலிருந்து அந்தத் தெருவைக் கடந்தவுடன் போலீஸ்காரர்கள் விரட்ட ஆரம்பித்தனர். ஏதோ சத்தம் வருகிறது என்று பின்னாடி திருப்பிப் பார்த்தான் அழகர். அவன் அருகில்
போலீஸ்காரர்கள் . அவ்வளவு தான். ஒரே ஓட்டம் பிடித்தான். இவர்கள் எல்லோரும் பின் தொடர்ந்து, அவனை விரட்டினர். தெருக்களில் போட்டிருந்த வண்ணக் கோலங்களை மிதித்து ஓடி, அலங்கோலங்கலாக மாற்றினர். அழகர், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினான். போலீஸ்காரர்கள் அனைவரும் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்தனர். அவனைப் பார்த்து, டுமில் டுமில் என்று சுட, அதிலிருந்து தப்பித்து ஓடினான். இவர்களும் விட்ட பாடில்லை.
தெருக்களிலிருந்து மெயின் ரோட்டைக் கடந்தனர். அழகர், ஒரு முடக்கில் திரும்பினான். அந்த இடத்தில் கல் தடுக்க, கீழே விழுந்தான். காலில் ரத்தம் வந்தது. அவர்கள் அருகில் வந்து விட்டனர். ரத்தம் வந்ததுகூட தெரியாமல் எந்திரித்து ஓடினான். ஓடும் போது எதிரே ஒரு இளம் பெண் புத்தாடை அணிந்து நடந்து வந்து கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் மீது மோத, இருவரும் அந்த இடத்தில் கீழே விழுந்தனர். அவளின் மேல் அழகர். "சாரிங்க்காவ்" னு கூறிவிட்டு எழுந்து ஓடினான். பின்னாடி வந்த ஒவ்வொருவரும் மோத, அவள் அணிந்திருந்த புத்தம் புதிய ஆடை அழுக்கு ஆடையானது. "உங்களையெல்லாம் உள்ள தூக்கி வைக்கனும். ராஸ்கல்ஸ், ஸ்டுப்பிட்ஸ், கண்ணு மண்ணு தெரியாம ஓடுராங்கே" னு திட்டிக்கொண்டிருந்தாள்.
இப்பொழுது போலீஸ்காரர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்தனர். திரும்பிப் பார்த்தான் யாரையும் காணோம். அப்படியே அழகர் வைகை ஆற்றில் இறங்கினான். வைகை ஆற்றில் கானல் நீர் கூட, காட்சி அளிக்க வில்லை. ஆங்காங்கே, கரையின் மேல் மறைந்திருந்த போலீஸ்கார்களும் கீழே இறங்கினர். அழகர் அங்கும் இங்கும் ஓட நான்கு பேரும் சுற்றி வளைத்து, கையில் துப்பாக்கியை எடுத்தனர். கொஞ்சம் கூட அழகரின் விழிகளில் மரணத்தைப் பற்றிய பயம் தெரியவில்லை. அவன் தலையைக் குறி பார்த்து டுமில்... டுமில்.. டுமில்.. டுமில்.. என்று சுட, அழகர் அப்படியே கீழே விழுந்தான்.
"அய்யா.. அழகர் மாட்டிக்கிட்டாண்டா" என்று சொல்லிவிட்டு,நான்கு பேரும் கையைத் தட்டிக்கொண்டனர். துப்பாக்கியால் சுட்டு கீழே விழுந்த அழகர், அப்படியே எந்திரித்து சிரித்துக்கொண்டே சொன்னான், "டே சாமி, இப்ப நீ திருடன், நாங்கள் எல்லாம் போலீஸ் ஓ கே வா?".
0 கருத்துகள்:
கருத்துரையிடுக