RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

சுந்தரமூர்த்தி வாத்தியார் .



                                          
                          கண்ணன்,  பள்ளிக்குப் போவதற்காக நெல் வயல்களின் வரப்பின் மேல் தட்டுத்தடுமாறி ஓடி,  பஸ் ஸ்டாப்பை  வந்தடைந்தான். குலுங்கி நெளிந்து வந்த அரசு  பஸ், கோட்டை மேடு பஸ்டாப்பிற்கு வந்ததும் நின்றது. எச்சில் துப்புவதற்காகத் தன் சீட்லிருந்து  எழுந்த சுந்தரமூர்த்தி வாத்தியார் , கீழிறங்கித் துப்பினார். கண்ணன்  பஸ்ஸில்  ஏறி, சுந்தர மூர்த்தி வாத்தியார் அமர்ந்திருந்த  சீட்ல் போய் அமர்ந்தான். 

சுந்தரமூர்த்தி வாத்தியார், "தம்பி, இங்க நா உட்கார்ந்திருந்தேன். எந்திரிக்கிறியா?"என்று சொல்ல. கண்ணன், "முடியாதுங்க.. உங்கள யாரு எழுந்து போச்சொன்னா" என்று அவருடன் வாக்குவாதம் செய்தான். பக்கத்தில் இருந்தவர்கள் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்ட பாடில்லை. அலங்காநல்லூர்  பஸ்ஸ்டாண்டு வந்ததும் பஸ் நின்றது.

பஸ்லிருந்து கீழே இறங்கியவுடன் கண்ணைப் பார்த்து கேட்டார் சுந்தர மூர்த்தி வாத்தியார் .

" தம்பி!எந்த ஸ்கூலு ", 

"கரட்டு ஸ்கூலு, அதுக்கு என்னாவாம்?", 

" இல்ல சும்மா கேட்டேன் தம்பி நீங்க போங்க " என்று  கூறிவிட்டு பள்ளிக்குச் சென்றார் சுந்தரமூர்த்தி வாத்தியார் .

                         அலங்காநல்லூர் பள்ளி மிக எழில் சூழ்ந்த பள்ளி. எங்குப் பார்த்தாலும்  பச்சைக் குடையை நிறுத்தி வைத்தது போல்  ஆங்காங்கே புங்க மரங்கள் நின்று காட்சி தரும்.   அம்மரங்களின் மேல் உள்ள குருவிகளும் காக்கைகளும் கச்சேரிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கும். பள்ளி, மிக உயரமான குன்று மேல் இருப்பதால், மேகக் கூட்டங்கள் பள்ளியின் மொட்ட மாடியை வருடிச் செல்லும். சுற்றுவட்டாரத்தில் எந்தக் கிரமாத்திலிருந்து பார்த்தாலும் பள்ளி  நன்றாகத்  தெரியும். இந்தப் பள்ளியை 'கரட்டு ஸ்கூல்' என்று செல்லமாகவே அழைப்பார்கள்.


                                  இந்தப் பள்ளியிலே இருபதுவருடமாக வேலை பார்த்து வருகிறார் சுந்தர மூர்த்தி வாத்தியார். நல்ல வளத்தி, சுருட்ட முடி, அவர் தலையில் உள்ள நரை முடியை வைத்தே அவரின் வயதை அறிந்து கொள்ளலாம். இவருக்குப் பயப்படாத மாணவர்களே இருக்க முடியாது. எந்தச் சேட்டை பண்ணினாலும் அடிக்க மாட்டார். ஆனால் அதற்குப் பதிலாக சேரில் எப்படி அமர்கிறோமோ அப்படி நிற்கச்  சொல்லுவார்.  கால் இரண்டும் சற்று நேரத்திற்குப் பிடித்துக்கொள்ளும். அது ஒரு மாதிரியான வலியாக இருக்கும். "இது ஆசனம் தான் தண்டனை அல்ல"   என்று மழுப்புவார். இதற்குப் பயந்துகொண்டே யாரும் தவறுசெய்ய யோசிப்பார்கள். மாதந்தோறும் விடுப்பு எடுக்காத மாணவர்களுக்குத் தன் செலவுலேயே பேனா, பென்சில் என்று வாங்கிக் கொடுப்பார். மாணவர்கள் புத்தகப் புழுவாக இருப்பதை விரும்ப மாட்டார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களைப் படித்து வரச் சொல்லி மாணவர்களிடம் வினாக்களைத் தொடுப்பார். 


                                தான் படிக்கப்போகிற கரட்டுப் பள்ளியில் தான், சுந்தரமூர்த்தி வாத்தியார் வேலை பார்க்கிறார் என்பது கண்ணனுக்குத் தெரியாது. இதுவரை கோட்டமேடு கிராமத்தில் படித்துவிட்டு இப்பொழுது தான் அலங்காநல்லூருக்குப் படிக்க வந்திருக்கிறான். போனவாரம் தான் இவனின் அப்பா பள்ளியில் சேர்த்துவிட்டுப் போனார்.  

                          'நமக்கு எந்த வாத்தியார் வரப் போகிறாரோ' என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தனர் ஒன்பதாம் வகுப்பு 'டி' பிரிவு மாணவர்கள். அதில் கண்ணனும் ஒருவன். சுந்தர மூர்த்தி வாத்தியார் அறைக்குள் வந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து " குட் மானிங் சார் "  என்று சொல்லிவிட்டு அமர்ந்தனர்.  

                                       சுந்தரமூர்த்தி வாத்தியாரைப் பார்த்தவுடன் கண்ணின் டவுசர் நனைந்து விட்டது. ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்து கொண்டே வந்தார், கடைசியாக இவனிடம் வர,  

"சார் நீங்க யாருனு தெரியாம பஸ்ல அப்படிப் பேசிட்டேன் மன்னிச்சிடுங்க சார்..."

                           " கவலைப் படாதெ நா ஒன்னும் செய்யல, தவற உணர்வதே பெரிய விஷயம். இனிமே யாரிடமும் அப்படி நடந்துக்காதெ  " என்று சொல்லி அவன் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு, அன்று அனைவருக்கும் அறிவுரைகளை வழங்கினார். 

                          ஒரு நாள் சமூக அறிவியலில், ஒரு பாடத்தை "நாளை படித்து வாருங்கள்" என்று அவர் சொன்னார். ஒரு சில மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் படித்திருந்தார்கள். சில மாணவர்களில் கண்ணனும் ஒருவன். அதற்குத் தண்டனையாக சேரில் அமர்வது போல் நின்றான். கால் வலி தாங்காமல் அழுதுவிட்டான். அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

                       அன்று, மணி  மூணு இருக்கும். கும்பகர்ணனைப் போல்  தூங்கிக்கொண்டு இருந்தான்  கண்ணன். "டே சார் வந்துட்டாரு டா" என்று  அவன் நண்பன் பூபதி எழுப்ப, 'டக்' என்று எந்திரித்தான். பக்கத்தில் இருந்த மாணவர்கள் அனைவரும் ஏளனம் செய்து சிரித்தனர். இவன் சொன்னது பொய் என்று தெரிந்ததும் மீண்டும் தனது தூக்கத்தைத் தொடங்கினான். 

 "கண்ணா ..கண்ணா எந்திரிப்பா ....." என்று மீண்டும் எழுப்ப 
" டே பேசமா போடா... " 
" நா தான் சாருடா.... " 
" சொன்னா கேக்க மாட்டீயா...  ஒன்ன...." என்று சொல்லி அடிக்க கையை ஓங்க, அவன் முன் சுந்திரமூர்த்தி வாத்தியார். 

 "சார் அடிச்சிடாதீங்க ..பால் யாவாரம் பார்க்குறோம். காலையில நாலு மணிக்கே எந்திரிச்சு பால் ஊத்தப் போனேன்  அதனால தான் சார்.. அசந்து தூங்கிட்டேன்"  என்று கண்ணன் சொன்ன வார்த்தைகள், கோபமாக இருந்த அவர் மனசையும் சாந்தப் படுத்திருச்சு. ஒருவனை அழைத்து டீ வாங்கிட்டு வரச் சொல்லி கொடுத்தார்.  கூச்சப்பட்டுக் கொண்டே குடித்து முடித்தான்.

                                       காலாண்டுத்தேர்வு முடிந்தது. இந்தத் தேர்வின் முடிவில், ப்ராகிராஸ் கார்ட்டை அனைவருக்கும் கொடுத்தார் சுந்தரமூர்த்தி வாத்தியார். அருண் என்பவன் பஸ்ட் ரேங்க் எடுத்திருந்தான். கண்ணன் மூணு பாடங்களில் பெயில். கண்ணன் இப்படி மார்க் வாங்குவதற்கு அவனின் குடும்பச் சூழ்நிலைதான் காரணம் என்பதை அறிந்த  சுந்திரமூர்த்தி வாத்தியார் ஒரு முடிவு செய்தார். இனிமேல் எது சொல்லிக்கொடுத்தாலும் நல்ல படிக்காத மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து,  அவர்களுக்கு புரிந்து விட்டால், அனைத்து மாணவர்களுக்கும் புரிந்து விடும் என்கிற புதுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 

                                அசோகரின் கலிங்கப் போரைப் பற்றி பாடம் நடத்திக்கொண்டு இருந்தார் சுந்தரமூர்த்தி வாத்தியார். ஆனால் கண்ணன், "காலைல யாரோ ஒரு ஆளு பாலுக்குப் பணம் தரலயே! யாரா இருக்கும்?" என்ற சிந்தனையில் மூழ்கி இருந்தான். கண்ணின் சிந்தனை வேறு பக்கம் செல்கிறதை அறிந்த  சுந்திரமூர்த்தி வாத்தியார், 

                                "கண்ணா, அசோகரின் வாழ்க்கையில் மாற்றத்தை தந்த போர் எது? என்று கேட்க,

திறு திறு என்று முழித்த கண்ணன், " கா..கா.. "

" சொல்லு...சொல்லு...கரெக்ட் தான்"

"கார்கில் போர் சார்" என்று கண்ணன் சொல்ல வகுப்பறையே குலுங்கிச் சிரித்தது.

                                          அனைத்து மாணவர்களையும் அமைதியாக இருக்கச் சொல்லி விட்டு பேசினார். அறிவு என்னும் தீ யை பற்றிக்கொள்ளும் மாணவர்களின் வகை மூணு எனவும். நன்றாக புரிந்துகொள்ளும் மாணவர்கள், கற்பூரம் போல் உடனே பற்றிக்கொள்வார்கள் என்றும், சற்றுக் குறைவாக புரிந்து கொள்ளும் மாணவர்கள் மரம் போல் கொஞ்சம் பற்றிக் கொள்ள தாமதம் ஆகுமென்றும், புரிந்து கொள்ளும் தன்மை யில்லாதவர்களைப் பச்ச வாழைமர பட்டையுடன்  ஒப்பிட்டும் கூறினார்.  மேலும்,

                                      "கண்ணா! நீ பச்சவாழை மரப்பட்டை, இன்னம் காயாம இருக்க, காஞ்சப்பறம் பாரு, கற்பூரத்தை விட, சும்மா கப் னு பத்திக்கவ, இவன்க கேலி செய்றத நினைச்சு வருத்தப் படதெ..." னு சுந்தரமூர்த்தி வாத்தியார் சொன்ன அட்வைஸ் அவனுக்கு புது தெம்பைக் கொடுத்தது.

                                         புது நம்பிக்கையுடன் பள்ளிக்கு வந்தான், அன்றாட வீட்டுப் பாடத்தை அன்றே முடித்தான். பாடத்தை நன்றாகக் கவனித்தான். சுந்தரமூர்த்தி வாத்தியார் கேட்கும் கேள்விகளுக்கு 'டாண்.... டாண்'னு பதில் சொன்னான். மாதந்தோறும் விடுப்பு எடுக்காமல் பேனா பென்சில் என்று பரிசைப் பெற்றான். இது கண்ணவா.!.... என்று அனைத்து மாணவர்களையும் ஆச்சரியப் பட வைத்தான்.

                                கண்ணன், அரையாண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் பாஸ் பண்ணினான். "இன்னும் உன்னால் நல்லாப் படிக்க முடியும்" என்று  சுந்திரமூர்த்தி வாத்தியார் கண்ணனைப் பாரட்டினார்.

                                          ஒரு நாள், பூபதி விளையாட்டுப் போக்க, காம்பஸ் கருவிய எடுத்து கண்ணன் உட்காருகிற இடத்தில வைக்க, அதன்மேல் கண்ணன் உட்கார, நறுக்கென்று குத்தியது, வலி தாங்காம கத்தி விட்டான். எந்த மாணவர்களையும் அடிக்காத சுந்திரமூர்த்தி வாத்தியார் பூபதியை பிரம்பை எடுத்து அடித்து விட்டார். உடம்பெல்லாம் தடித்துவிட்டது. 


                                           பூபதியின் அப்பா  குமரேசன் அந்த ஊரு சேர்மனின் தம்பி. அன்று  பள்ளிக்கு வந்து பெரிய ரகலையே பண்ணிவிட்டார். "ஏம் பிள்ளைய எப்படியா அடிக்கப் போச்சு, அரசாங்கமே அடிக்க கூடாதுனு சொன்னப்ப நீ எப்படியா அடிச்ச? உன்ன என்ன பண்றேனு பாரு" என்று சுந்தரமூர்த்தி வாத்தியாரைப் ஏசிவிட்டுப் போனான். 


                                         பள்ளி தலைமையாசிரியரும், "உங்களுக்கு என்னங்க வந்துச்சு அவங்களுக்குள்ள சண்டை போடவாங்கே கூடிக்கிவாங்கே  நீங்க எதுக்கு அடிக்கிறீங்க. அந்தாளு என்ன பண்ணப் போறாரோ. சி .ஒ வரைக்கும் போனா பெரிய பிரச்னை ஆயிடும் அப்பறம் நா ஒன்னும் செய்ய முடியாது " என்று கடிந்து பேசினார். அப்போது தான் "ஏன்டா இந்த வாத்தியார் வேலைக்கு வந்தோம்"னு  வேதனைப் பட்டார் சுந்தரமூர்த்திவாத்தியார். 


                                குமரேசன் சொன்ன படி, அந்த ஊர் சேர்மன் அரசியல் செல்வாக்கை வைத்து அமைச்சரிடம் பேசி, சுந்தரமூர்த்தி வாத்தியாரை இடைநீக்கம் செய்ய ஏற்பாடு பண்ணினார். இதன் படி சுந்தரமூர்த்தி வாத்தியரை ஒரு மாதம் இடைநீக்கம் செய்தனர். "தவற கண்டிச்சதுக்குக் கெடைச்ச பரிசு இது தானா? " என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அந்தத் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.


                                 அதன் பிறகு தன் வேலையை மட்டும் பார்த்தார். அன்றையிலிருந்து எந்த மாணவர்களுக்கும் எந்த தண்டனையும் கொடுப்பதில்லை. படிக்கச் சொல்லுவார் நன்றாகப் புரியும் படி நடத்துவார். "பாடத்தை நடத்திறது ஏ வேலை படிக்கிறது ஒங்க வேலை" என்ற கொள்கையை மட்டும் கையாண்டார். 


                             இதில் மாணவர்களுக்கு உடன்பாடு இல்லை. " நீங்க கேள்வி கேக்கலைனா எங்கனால முன்னமாதிரி படிக்க முடியாது சார்" என்று பூபதி  உட்பட  அனைத்து மாணவர்களும் கெஞ்சிக் கேட்க, மறுபடியும் பழைய சுந்தரமூர்த்தி வாத்தியாரைப் பார்க்க முடிந்தது.

                               அன்று கண்ணன்  வீட்டிலிருந்து தேங்காய், பழங்கள், முதலியவற்றை கொண்டு வந்து  சுந்தரமூர்த்தி வாத்தியாரிடம் கொடுத்தான். "மாணவனிடம் எதிர்பார்க்கிறவன் ஆசிரியரே இல்லை"  என்று   வாங்க மறுத்து, மற்ற வாத்தியார்களுக்கு முன் வேறுபட்டு நின்றார். 


                         முழு ஆண்டுத்தேர்வு முடிவடைந்தது. கோடை விடுமுறைநாட்களில் சுந்தரமூர்த்தி வாத்தியார் ஞாபகம் வரும்போதெல்லாம், அவரின் செல்போனுக்குத்  தொடர்பு கொண்டு பேசிவான். அவரும் இவனிடம் பேசுவதற்காக நேரம் ஒதுக்குவார்.

சுந்தரமூர்த்தி வாத்தியார்  அந்த விடுமுறை நாளில்  தனது சொந்த மாவட்டத்திற்கு ட்ரான்ஸ்பர் கேட்டுயிருந்தார். ட்ரான்ஸ்பரும் கிடைத்தது. 


                                மீண்டும் பள்ளிக்கூடம்  திறந்தது.  முதல்நாள், பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்களிடமும் மற்றும் சக ஆசிரியர்களிடம் கூறிவிட்டு,  ஒரே கூட்டிலிருந்துவிட்டுப் பிரியும் பறவை போல அந்தப் பள்ளியிலிருந்து விடை பெற்று, வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார்.

                          அப்பொழுது. கண்ணன், " சார் சார்........... " என்று கூப்பிட்டுக்கொண்டு பின்னாடியே வர, அவனுக்காக நின்றார்.

                              "சார்.. அதுக்குள்ளையும் போறீங்க.  நீங்க சொல்லிக்கொடுத்தனால தான் சார் நல்லாப் படிச்சேன். இப்ப திடீர்னு போறீங்களெ " என்று வருத்தத்துடன் கூறினான்.

                                             " ரெம்ப நாள இங்கெ வேலை பார்த்துட்டேன், முன்ன மாதிரி அலைய முடியல கண்ணா. கடைசி காலக்கட்டத்தில சொந்த ஊருல இருக்கிறதுதான் நல்லது அதத்தான் ஏம் பிள்ளைகளும் விரும்புதுக "

 " உடனே போகணுமா சார் ?" என்று கண்ணீருடன் கூற,

"போகணும் கண்ணா..... அஞ்சு நாளைக்குள்ள ஜாயின் பண்ணனும் இப்ப போனாத்தான் சரியா யிருக்கும். போறதுக்கு முன்னாடி ஒன்னும் மட்டும் சொல்ல விரும்புறேன், படிப்பும் ஒழுக்கமும் உன்கிட்ட இருந்தா எங்க இருந்தாலும் பொழைச்சுக்குவ, படிக்க வேண்டிய வயசுல நல்லாப் படி. இந்த வருஷம்   டென்த் வேற, அம்மா அப்பாவ கடைசி வரைக்கும் பாத்துக்க" என்று அவரும் கண் கலங்கி பேசிவிட்டுப் போனார். அவர் மறையும் வரை அந்த வழியைப் பார்த்துக்கொண்டே இருந்தான் .

                                   மாலை நான்கு மணி  ஆனதும் பெல் அடித்தது. பள்ளி மாணவர்கள் அனைவரும் வீட்டுக் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில்  சில்வண்டுகளைப் போல ஹே ........ஹே......... என்ற சத்தம்  போட்டு வெளியே வந்தனர். ஆனால் கண்ணன் மட்டும் சுந்தர மூர்த்தி வாத்தியார் பள்ளிய விட்டுப் போன வருத்தத்திலும், அவர் மேல் உள்ள ஆத்மார்த்தமான அன்பினாலும், அவரை மறக்க முடியாம  மெல்ல நடந்து, பஸ் ஸ்டாண்டை அடைந்தான்.

                          பஸ் வந்ததும் வேகமாகப் போய் ஏறி இடம் போட்டான் கண்ணன். அந்த சீட்ல் உட்கார்ந்ததும் சுந்தர மூர்த்திவாத்தியார் ஞாபகம் தான் வந்தது. பஸ் கிளம்பியது. அப்போது பஸ்ஸில் ஒரு  பெண் தன் குழந்தையோடு நின்று கொண்டிருந்தாள். பஸ் போகிற வேகத்தில் அந்தக் குழந்தை அழ ஆரம்பித்து விட்டது.

                                 சீட்லிருந்து எழுந்த கண்ணன்,  குழந்தையோடு நின்றிருந்த பெண்ணை அழைத்தான், "அக்கா இங்கெ வந்து உட்காருங்க"  .



கடிதம்



                                         பணப் பிரச்னையில், அன்று ரவிக்கும் ராஜேஷுக்கும் பயங்கர சண்டை நடந்து கொண்டிருந்தது. ராஜேஷ், "டே! உன்னக் கொல்லாம விட மாட்டேன்டா" என்று சொல்லி  அவன் கழுத்தில் கை வைத்து நெரிக்க, பக்கத்தில் முத்தையா என்கிற பெரியவர்  வீட்டுக்குள் வந்து விலக்கி விட்டார். "ஏப்பா  படிக்க வந்த எடுத்துல இப்படித்தான் சண்ட போடுறதா, இதுக்குத்தான் மதுரயில இருந்து வந்தீகளா, நல்ல பிள்ளைக" என்று சொல்லி சமாதானப் படுத்திவிட்டுப் போனார். இவர்கள் சண்டை போடுவதும் கூடிக்கொள்வதும் புதிதல்ல. சற்று நேரத்தில் கூடிக்கொண்டனர்.


                                        அந்தத் தெருவில் யாரும், யார்வீட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். நகரங்களில் இவ்வாறு இருப்பது சகஜம் தானே. அருகில் உள்ளவர்களிடம் போய்ப் பேசினால் யாரும் முகம் கொடுத்து பேசமாட்டார்கள். இதனால் இவர்கள் வேலை உண்டு, படிப்புண்டு என்று இருந்தனர். முத்தையா, பெரியவர் மட்டும் அவ்வப்போது வந்து சண்டையை விலக்கி விடுவார்.

                                           இவர்கள் இருப்பதோ கீழ் வீடு. மாடி வீட்டிலிருந்து ஒரு பொண்ணு  கீழே இறங்கி தினமும்  பள்ளிக்கூடத்திற்குச் செல்வாள். இவர்களின் வீட்டு வாசப்படியைக் கடந்துதான் செல்ல வேண்டும். அவள் பெயர் ப்ரியா. பண்ணிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் அப்பா ஒரு முரடன் பகல் எல்லாம் ஓட்டலில் உழைத்துவிட்டு, இரவு ஆனவுடன் குடிக்க ஆரம்பித்துவிடுவார். ப்ரியாவின் அம்மாவிற்கு அவரை சமாளிப்பது தான் வேலை.


                                           அன்று,  ப்ரியா மாடியிலிருந்து கீழே வரும்போது யதார்த்தமாக ரவியைப் பார்த்துத்  திரும்ப, ரவிக்கு மனசுக்குள்  'திக்' என்று இருந்தது. அன்று முதல் ரவி அவளைப் பார்க்க ஆரம்பித்தான். அவள் பள்ளிக்குப் போகும் போதெல்லாம் வெளியே வந்து நிற்பான். ஒரு நாள்,  ராஜேஷிடம் இந்த விஷயத்தை சொல்ல, ராஜேஷ், "மாப்புள இந்தக் காலத்தில் நல்ல பொண்ணு கிடைக்கிறதே!  கஷ்டம், காலேஜ் போனாலே பொண்ணுக கெட்டுப் போயிரும், லவ்வச் சொல்லிரு" என்று காதலுக்கு அடித்தளம் போட்டான். 

                                             அம்மா அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கவக்கிறார்கள்,   என்கிற எண்ணம் துளிகூட ரவியிடம் இல்லாம போச்சு. இதற்கு ராஜேஷும் ஒத்துஊதினான். ரவி, அவளிடம் எப்படிப் போயி பேசலாம் என்று ராஜேஷிடம் யோசனை கேட்க. "எக்ஸமுக்கு +2 புக்கு  தேவைப்படுதுனு சொல்லி பேசுடா" என்று சொன்னான். மாடிப்படியிலிருந்து கீழே இறங்கி வருவாள் என்று தெரிந்து ரவி கீழே காத்திருந்தான். மெதுவாக படியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் ப்ரியா. ரவியின் முகம் மலர்ந்தது.  பின்னால் அவளின் அப்பாவும்  இறங்கி வந்தார். அவரைப் பார்த்தவுடன் மலர்ந்த முகம் கூம்பிடுச்சு.   அப்படியே வீட்டிற்குள் போய் மறைந்து கொண்டான். நல்ல வேளை ப்ரியாவின் அப்பா, ரவியப் பார்க்கல.

                                    வீட்டில் பார்த்துக்கேட்டால் வம்பாயிடும் என்று தெரிந்ததால், பள்ளிக்குச் செல்லும் வழியில் கேட்க்கலாம் னு  ரவியும் ராஜேஷும் பிள்ளையார் கோயில் அருகில் காத்திருந்தனர். அன்ன நடை போட்டு மெல்ல வந்தாள்.  கதிரவன் ஒளி, அவளின் முகத்தில் அடிக்க,   தங்கத் தாமரையே  நடந்து வந்ததது போல் இருந்தது. ரவி அவளை மறிக்க, ப்ரியா கொஞ்சம் பயந்த உணர்வுடன் அவனைப் பார்த்தாள். "டி.என்.பி.எஸ்.சி எக்ஸமுக்கு படிக்க +2 தமிழ் புக் வேணும் தரமுடியமா?" என்று ரவி  கேட்க,  "இந்தாங்கண்ணா  படிச்சு முடிச்சுட்டு குடுங்க" என்று கூறிவிட்டு தலை குனிந்த படியே போனாள்.

                                   "டே ராஜேஷ், அவ என்னை அண்ணானு சொல்லிட்டாலே டா  " என்று ரவி கூற, "பொண்ணுக எல்லோரிடம் மொத அப்படித்தான் பேசுவாங்க,பேசிப்  பாரு பழகப் பழகப் பாலும் புளிக்கும் மாதிரி நிச்சயம் பேசுடுவா டா"னு சொல்லி உசுப்பேத்திவிட்டான் ராஜேஷ். முதலில் யோசிச்ச ரவி அப்பறம்  அவளை தன் வழியில் கொண்டுவரத் திட்டமிட்டான்.

                                          அதற்கு, ராஜேஷ்  ஒரு யோசனை தெரிவித்தான்.   "அந்தப் புத்தகத்தை திருப்பி கொடுக்கும் பொழுது,  அதில் உன் விருப்பத்தை எழுதி கொடுடா னு" ராஜேஷ் சொல்ல, கடிதம் எழுதினான் ரவி. 'ப்ரியமான ப்ரியாவுக்கு, உன் மேல் எனக்கு பிரியம். என் காதலை ஏற்றுக்கொள். இப்படிக்குப் பிரியமானவன்', என்று எழுதி புத்தகத்தில் வைத்து, அவளிடம் கொடுப்பதற்காக  அதே  பிள்ளையார் கோயிலில்  அருகே நின்று  கொண்டிருந்தனர். ரவி அவளிடம் போய்ப் பேசத் தயங்க, ராஜேஷ் அவளிடம் போய்ப் பேசினான். "ரவிக்கு உன்னைப்  பிடிச்சிருக்காம், ஒ மனசுல என்ன இருக்குனு கேட்கச் சொன்னான்" என்று கூற, ராஜேஷ் கையில் இருந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு, "நா அவுங்கள அப்படி நினைக்கலண்ணா" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அந்தப் புத்தகத்தினுள் கடிதம் இருந்தது ப்ரியாவுக்குத் தெரியாது. கையில் புத்தகம் வைத்தப்படியே வீட்டிற்குள் நுளைந்தாள்.

                                                  அன்று ப்ரியாவின் அக்கா, மாமா, குட்டிஸ் மிதுளா எல்லாம் வந்திருந்தார்கள். அக்கா.... என்று கட்டிப் பிடித்து சந்தோஷப் பட , மிதுளா ,'சித்தி' என்று தன் மழலை மொழியில் ப்ரியாவை கூப்பிட்டாள்.  ப்ரியாவின்  அப்பா வழக்கம் போல குடித்துவிட்டு வந்திருந்தார். இருந்தாலும் இன்று கொஞ்சம் குறைவு தான். எல்லாரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

                                             அப்பொழுது கீழே வைத்திருந்த புத்தகத்தை மிதுளா எடுக்க, அதில் இருந்த கடிதம் வெளியே வந்தது. அதை மிதுளா எடுத்து கையால் கசக்க,  ப்ரியாவின் அப்பா, " ஏம்மா இது என்ன பேப்பரு சின்னப் பிள்ளை, விளையாட்டுப் போக்க கிழிக்கப் போகுது" என்று கூறி, அதை எடுத்து  அவர் யதார்த்தமாகக் கடிதத்தைப் பார்த்துவிட்டார். பார்த்த, நிமிடத்திலேயே, "படிக்கப் போறியா?....இல்ல  ல்வ் பண்ணப் போறியா? யாருடி இதக் குடுத்தா?... சொல்லு....சொல்லு..........." என்று  அடிஅடினு அடித்துவிட்டார். எல்லாரும் விலக்கிவிட்டர்கள். அப்படியிருந்தும் துள்ளிக்குதித்த அவர், ஓங்கி  வயிற்றில் உதைக்க, ப்ரியா சுவரில் மோதி அப்படியே கீழே விழுந்தாள். சுவரில், இரத்தம்  வழிந்து கொண்டிருந்தது.

                                      அக்கம் பக்கத்தில்  யாருக்கும் சொல்லாமல்,  இரவோடு இரவா, சடலத்தை அடக்கம் செய்தார்கள். அன்று முதல் ப்ரியாவின் அப்பா தன் மகள சாகடித்துவிட்டோம் என்கிற விரக்தியில் சாப்பாட்டையே மறந்து விட்டார். தன் மகள் புகைப்படத்தைப் பார்த்த படியே இருந்தார்ரவியும், ராஜேஷீம் வீட்டைக் காலி பண்ணனும்முனு முடிவு பண்ணினர். ஆனால் வீட்டு ஓனர் வெளியூர் போனதால அங்கேயே இருக்கிறதா ஆயிடுச்சு.

                                   ஒரு நாள், இரவு 10 மணி இருக்கும். படிக்க போகிறததுக்கு முன் ஆப்பிள் தின்னுவது இவர்களின் வழக்கம்.  கத்தியை எடுத்து ஆப்பிளை நறுக்கினான் ராஜேஷ். இருவரும் தின்றார்கள். அடுத்தப் பழத்தை நறுக்கலாமுனு கத்தியை வச்ச இடத்தில பார்க்க, கத்தியைக் காணோம். வீட்டில் எங்க தேடியும் கிடைக்கல. இருவருக்கும் வாக்கு வாதம் மீண்டும் சண்டை. "நீ தாண்டா எடுத்த"....     " இல்ல நீ தாண்டா எடுத்த."... என்று. ஒரு வழியாகப் படுத்தார்கள். படுக்கும் போது இருவருக்கும் 'கத்திய யாரு எடுத்துருப்பா' என்கிற சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. ரவி தூங்கிட்டான். ராஜேஷுக்கு தூக்கம் வரவில்லை. அந்த நேரத்தில் எங்கேயோ ஒரு ஓலச் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. எந்திரித்து வெளியே வந்து பார்த்தான். 

                தெருவில் உள்ள விளக்குகள் அமந்து அமந்து எரிந்தது. ஆயிரக்கணக்கான வெள்ளைக் காகிதங்கள் தெருக்களில் பறந்து கொண்டிருந்தது. அதில் ஒரு காகிதம் பறந்து வந்து ராஜேஷின் முகத்தில் மோதியது. பயந்த உணர்வுடன் அதைப் பார்த்தான். அது ப்ரியாவிற்கு எழுதிய கடிதம். பார்த்த வினாடியிலே இவனின் நாடியின் வேகம் அதிகரித்தது. என்ன செய்வதறியாமல், வேகமாக வீட்டிற்குள் சென்று, சட்டென்று கதவைச்சாத்தினான். ரவியை எழுப்பி அந்தக் கடிதத்தைக் காட்ட, அது வெறும் காகிதமாகவே தெரிந்தது. "டே சும்மா போய்ப்  படுடா, நானேப் பயப்படல நீ எதுக்குப் பயப்பிடுற" னு சொல்லிப் படுத்தான். 

                                           அதிகாலையில்  5 மணிக்கு கண் விழித்தான் ராஜேஷ். அப்பொழுது பக்கத்தில் படுத்திருந்த ரவியைக் காணோம். "எங்க போயிருப்பான் "னு தேடி வெளிய வர, பாத்ரூம்மில் லைட் எரிந்து கொண்டு இருந்தது. "அப்பாடா" என்று பெருமூச்சு விட்டான். வெகு நேரமாகியும் வரவில்லை என்பதால், பாத்ரூம் கதவை மெல்ல திறந்து, உள்ளே  போயிப் பார்க்க, ரவி கத்தியால் குத்தப்பட்டு இருந்தான். அப்படியே ஆடிப்போயிட்டான்.  அவன் வயிற்றில் சொருகப்பட்ட கத்தி, இரவு ராஜேஷ் ஆப்பிளை அறுத்தக்கத்தி. ராஜேஷ் அப்படியே பயத்தில் மயங்கி விழுந்தான்.

                        அந்த இடம் முழுவதும், வெள்ளைத்தாள்கள் பறந்து கொண்டே, ராஜேஷை சுத்திக் கொண்டிருந்தது. அப்பொழுது, "பர்மா காலனியில ஒரு கொல நடந்துருக்கு  உடனே வாங்க சார்" என்று யாரோ ஒரு பெண், தொலைபேசி மூலம் போலீஸிடம் புகார் சொல்லும் குரல்சத்தம், கேட்டுக்கொண்டிருந்தது. 

                                        ராஜேஷ், கண்விழித்துப் பார்க்கையில் சுற்றிலும் போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். பக்கத்தில் ரவியின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அந்த இடத்தில் மக்கள் ஒன்று  கூடி வேடிக்கைப் பார்க்க, போலீஸ்காரர்கள் ராஜேஷை கைது செய்தனர். 

                         கோர்ட்ல் கொலை செய்யப்பட்டதற்குச் சாட்சியமாக ராஜேஷ் கைரேகை பதிந்திருந்த கத்தியைக் காண்பித்தனர். மற்றொரு சாட்சியமாக முத்தையாவை அழைத்தார்கள். "ஐயா, ரெண்டு பேரும் அடிக்கடி சண்ட போடுவாங்கே. ஏற்கனவே ஒரு மொற இப்படித்தான சண்டப் போட்டு ராஜேஷ், ரவி கழுத்த நெருச்சத நா கண்ணால பாத்தேன்" என்று அவர் அளித்த வாக்குமூலம் ராஜேஷுக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது. 


                                            ராஜேஷை சிறையில் அடைத்தார்கள். அப்பொழுது ஒரு காகிதம் அவனை நோக்கி வந்தது. அதில் எதோ எழுதிருந்தது. ராஜேஷ் படித்தான். 

                                            "உங்களப் போல ஆளுகனால தான் என்னை மாதிரி நல்ல பொண்ணுகளும் படிக்கிற வயசுல, கெட்டுப் போயிறாங்க.  என்னோடு, அண்ணன் யாரும் பிறக்காதுனால, ரவிய அண்ணன நினைச்சுத்தான் பார்த்தேன். ஆனா ரவி அப்படி நடந்துக்கல,  ரவி பண்ணத் தவறுக்கு ஏ உயிர் போயிடுச்சு. ரவி  மட்டும் தப்பு பண்ணல நீயும் தான். தவறு செய்தவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும், குற்றவாளிகள் தான்" என்று இருந்ததை, ராஜேஷ்  படித்து முடித்தான்.

                                     படித்து முடித்தவுடன், அந்தக் கடிதம் அப்படியே சிறைச்சாலையில் இருந்து வானத்தை நோக்கி பறந்து, சென்று கொண்டிருந்தது. ராஜேஷின் விழிகளில் கண்ணீர்த் துளிகள்  கசிந்தது.


 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy