அவளிடம் பல முறை காதலை வெளிப்படுத்தினான் பலனில்லை. முடிவு செய்தான் தற்கொலை செய்யலாம் என்று. ஏறினான் எட்டு மாடிக் கட்டத்தில். எட்டாவது மாடி நுனியில் நின்று தற்கொலைக்குத் தயாராக நின்றான். அவள் பெயரைச் சொல்லி அழைத்தான். அவள் வந்தாள். முடிவாக, 'நீ என் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்த இடத்திலிருந்து குதித்துச் செத்து விடுவேன்' என்று கத்தினான்.
கீழே கூடிநின்ற மக்கள் 'வேணாம் வேணாம்' என்று ஆரவாரம் செய்தனர். அவள் அந்த இடத்தை விட்டு நகர, இவன் கிழே குதிக்கத் தயாரானான். கீழே காவல் துறை அதிகாரிகள் 'தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம் 'என்று எச்சரிக்கை செய்தனர்.
காவல்துறை அதிகாரிகள் அவளிடம் சமாதானப் புறாவைத் தூது விட்டானர். 'எனக்குப் புடிக்காத ஆள எப்படி சார் மேரேஜ் பண்ணிக்க முடியும்' என்று அவள் வாதம் செய்தாள்.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மேலிருந்து அவன் கீழே விழுக, இடையில் கம்பிவடத்தில் சிக்கிக் கொண்டான். அந்த கம்பி வடம் மழையில் நனைந்து இற்றுப்போயிருந்தது. அவனைக் காப்பாற்ற காவல்துறை தீவிர ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தது. அதற்குள்ளேயும் அந்தக் கம்பி அறுந்துவிட, அப்படியே மேல் இருந்து கீழே விழுந்தான். தலை தரையில் பட, இரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை அவள் காலடியில் சிதறிக்கிடக்க.....
அவன், 'அம்மானு' கத்திக்கொண்டு தூக்கத்தில் இருந்து கண் விழித்தான். 'நல்ல வேளை இது கனவா ' என்று தன் தலையைப் பிடித்து தொட்டுப்பார்த்தான். 'ம்ம்.. இரத்தம் இல்ல.. கனவு தான்' என்று உறுதிப்படுத்திக்கொண்டான். அவன் அம்மா, ' என்ன சாமி ஆச்சு'னு கேட்டு, பயந்து ஏதும் போயிருப்பான் என்று நினைத்து, பூஜை அறைக்குச் சென்று, 'கடவுள் புன்னியத்தில எம் பிள்ளைக்கு எதுவும் ஆகாக்கூடாது'னு மனதில் வேண்டி திருநீற்றைப் பூசி விட்டாள். அதற்குப் பின் மீதி இரவு, அவனுக்கு சிவராத்திரி தான்.
எழுந்து குளித்துவிட்டு வேலைக்குக் கிளம்பினான். பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் போது யதார்த்தாமாக எதிரில் பார்த்தான். எட்டு மாடிக்கட்டடம் இவனை எதிர்பார்த்து நின்றது போல் இருந்தது. இவனுக்கு உடல் நடுங்கிவிட்டது. உடம்பெல்லாம் வேர்த்து விருவிருவித்துவிட்டது. அப்படியே பின்னாடி திரும்ப அவள் நின்று கொண்டிருந்தாள். அவ்வளவு தான் ஒரே ஓட்டம். 'ஆத்தாடி! சுடிதார் போட்டு எமன் உருவத்தில் வந்து நிக்கிறாளே?' னு மனசுல நினைத்துக்கொண்டு பின்னாடி திரும்பாம ஓடிக்கொண்டு இருந்தான் வீட்டை நோக்கி........
0 கருத்துகள்:
கருத்துரையிடுக