அது குற்றால நீர்வீழ்ச்சியோ இல்லை, அகத்தியர் நீர் வீழ்ச்சியோ சரியாகத் தெரியவில்லை பசுமையான மரங்களுக்கு மத்தியில், பாறையின் மேல் வெள்ளிக்கம்பியை உருக்கி ஊத்தினாற் போல கொட்டிக்கொண்டிருக்கிறது அருவி நீர்.
அந்த அருவிநீரில், கதிரவன் ஒளி பட, வட்டமாக வண்ணங்கள் பிரிந்து, நாங்கள் மொத்தம் ஏழு பேர் என்பதை நினைவுபடுத்தினாற் போல இருந்தது.
மலைக்கு அடிவாரத்தில் பச்சைப் போர்வையை விரித்து வைத்தாற் போல நெற்பயிர்கள் காட்சித் தர, மலைக்குப் போட்டியாக வயலின் வரப்பு ஓரத்தில் ஓங்கி உயர்ந்த பனைமரங்ளும் நிற்கிறது.
பங்குனி மாதம் என்று நினைக்கிறேன் உச்சி வெயிலில் வானம் வெள்ளையடித்தாற் போல பளிச் சென்று இருக்க, வானத்தைக் கண்டு பொறாமைப்பட்ட காக்கைகள், அழுக்காக்க ஒன்று கூடிப் பறந்தன மேல் நோக்கி.
அருவி நீர் காட்டின் மேடு பள்ளங்களில் பாய்ந்து ஓடி நதியாகத் தன்னை வேடமிட்டுக்கொள்ள, அந்த நதியின் கரையோரத்தில் ஒரு மானும் கன்றும் தாகத்தைத் தீர்ப்பதற்காக வர, நீண்ட நாள் பசியைப் போக்க, மானை நோக்கி பாயத் தயாராகிறது சிங்கம்.
அதிலிருந்து சற்றுத் தொலைவில் படகில் ஒரு வயதான முதியவர் இடுப்பில் வேட்டியைக் கட்டிக்கொண்டு, தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருக்க, அவருக்கு பின்புறம் தண்ணீருக்குள் ஊர்ந்து வாயைப் பிளந்து கொண்டு வந்தது ஒரு முதலை.
இப்படி இயற்கைக்காட்சிகள் நிறைந்த, புனைந்த, அழகான ஓவியத்தை, அமுதன் தன் வீட்டுச் சுவரில் மாட்டுவதற்காக ஆணி அடித்துக்கொண்டு இருந்தான்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக