ஒரு பை நிறைய ரோஜாவும் மற்றோரு பையில் கனகாமரமும், மல்லிகையையும் தூக்கிக்கொண்டு பூஞ்சோலை கிராம பஸ்டாப்பில் இறங்கினான் பூவரசன். மயில்தோகையாக இருந்தாலும் கட்ட வண்டியில அதிகமாக ஏத்துனா வண்டி அச்சானி எப்படி முறியுமோ அது மாதிரி பூவரசன் தோள்பட்டையும் முறிஞ்சு போன மாதிரி ஒரு வலி .
பூ விற்பவர்களின் பொழப்பு கட்டு கம்பியில் நிற்கிறமாதிரி. கல்யாணம், கேதம், தேர்தல், கோயில் திருவிழா அப்ப மட்டும் தான் இவர்களுக்கு வாழ்க்கை.
வீட்டிற்கு வந்ததும் இறக்கி வைத்தாள் அவன் மனைவி கல்யாணி. "நெஞ்சு வலிக்குது கொஞ்சம் தண்ணி கொடுமா? என்று வாங்கி குடித்தான் பூவரசன். ஊருக்குள்ளே ஒரே கொட்டு சத்தம் ட்ர்ங்ட்ட.. ட்ர்ங்ட்ட ..ட்ர்ங்ட்ட.. ட்ர்ங்ட்ட ..என்று. அந்த வழியாகப் போன கொத்தனார் துரை பூவரசனைப் பார்த்து, "என்னப்பா இன்னைக்கு உங்க காட்டில் மழை தான், தெற்க்குத்தெரு ஆறுமுகம் செத்துட்டாரு போல" என்று கூற, "என்னைக்கும் மத்தவுங்க செத்து நாங்க வாழனுமுனு நினைக்க மாட்டோம்ப்பா" துரையிடம் வருதத்துடன் கூறினான் பூவரசன். "சும்மா தமாசுக்கு சொன்னேன்"னு கிழம்பினான்" துரை.
துரை பேசியதை பூவரசனின் மகன் ராஜா பார்த்துக்கொண்டு இருந்தான். "ஏப்பா , ஆறுமுகத் தாத்தா செத்ததுல நமக்கு நிறைய மாலை விக்கிமுல" . "விற்கும்பா ஆனா நம்ம அப்படி நினைக்க கூடாது " என்று சொல்ல, அதை காதிலேயே வாங்கல ராஜா .
எதிர்த்த வீடு தாத்தாவைப் பார்த்த ராஜா, "ஆறுமுகத் தாத்தா போயிட்டாரு நீ எப்ப தாத்தா போற" என்று நக்கலாக கேட்டான் ராஜா. "நமீதாவுடன் போட்டா எடுக்காமா இந்தக் கட்டை போகாது"னு சொல்லிட்டாரு போட்டா தாத்தா. இந்த ஊருக்கு சூட்டிங் வருகிற எல்லாம் நடிகைகளிடம் போட்டா எடுத்து வீட்டில மாட்டி அழகு பார்ப்பாரு. அதனாலயே அவரு பேரு போட்டா தாத்தா.
அன்று நவம்பர் 14, பக்கத்து ஊருல விளையட்டுப்போட்டி. டாட்டா காட்டி வழி அனுப்பி வச்சாங்க பூவரசுனும் கல்யாணியும். போட்டி முடிந்ததும் கையில பதக்கத்தோடு இறங்கினான் பேருந்தில் இருந்து. ஊருக்குள்ள மீண்டும் கொட்டுச்சத்தம் ட்ர்ங்ட்ட.. ட்ர்ங்ட்ட என்று. ராஜாவுக்கு ஒரே சந்தோஷம், அவன் கால்கள் குத்தட்டம் போட்டது. "பாவம் போட்டா தத்தா போயிட்டாரு அய்யா ஜாலி நம்ம அப்பாவுக்கு நிறைய மாலை விக்கிமுல" ..என்று மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அருகில் வந்தான்.
சங்குச் சத்தம் முழங்க, கொட்டுச்சத்தம் அதிகரிக்க, இவன் நடையின் வேகம் குறைய, பெண்கள் கதறல் சத்தத்தின் மத்தியில் இவனின் அன்னை கல்யாணி அழுதுகொண்டு இருக்க, பூவரசனைச் சேரில் உட்காரவைத்திருந்தார்கள் பூமாலைகளைப்போட்டு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக