மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ஒரு பார்வை
சில கனவுகள் ஒரே நாளில் நடந்துவிடலாம் ... சில கனவுகள் பல வருடங்கள் ஆகலாம்... இப்படி என் கனவுகள் பற்றி கடந்தவாரம் எதிர்வீட்டுகார ர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம்..
"அக்கா , ராஜேஸ்வரி சினிமாஸ்னு ஒரு தியேட்டர் கட்டனும் அதில் நான் என் மனைவி பையன் மூன்று பேரும் தனியா உட்கார்ந்து படம் பாக்கனும்க்கா னு சொன்னேன்.
கடந்த ஞாயிறு அன்று காலை 11 மானிங் ஷோ தான் என்றாலும் பெரம்பலூர் ஸ்வாதி தியேட்டர் சென்று மெட்ராஸ் மேட்னி படத்திற்குப் போனோம்...
எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல் போனோம்.. படம் பிடித்திருந்தது எனக்கு. குடும்பக்கதை என்பதாலும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம்மோடு பொருத்திப் பார்க்கிற படமாக மெட்ராஸ் மேட்னி இருந்தது... எளிமையான குடும்ப பின்னணிகளைக் கொண்ட படங்கள் அரிதான இந்தக் காலக்கட்டத்தில் மெட்ராஸ் மேட்னி சினிமா பிரியர்களுக்கு ஒரு வரம்.....
கதையோ காட்சியோ பெரிதாகவோ பிரமாண்டமாகவோ இல்லை என்றாலும் ரசிக்கும் படியாக இருந்தது தான் படத்திற்கு பிளஸ்...
எழுத்தாளராக கதை சொல்லியாக வரும் சத்யராஜ் பின்னனி குரலுடன் படத்தை நகர்த்துகிறார்...
ஆட்டோ ஒட்டிக்கொண்டு தந்தை கதாபாத்திரத்தில் படத்தை தாங்கிப் பிடிக்கிறார் காளிவெங்கட். ஐடி வேலை, அமைதியான திருமணமாகாத மகளாக வரும் ரோஷினி ஹரிப்ரியனின் பொறுப்பான கதாபாத்திரம் மனதை ஈர்க்கிறது.. நாய்க்குட்டியை வளர்க்கும் மகன் விஷ்வா நடிப்பு எதிர் வீட்டு தம்பியை ஞாபகப்படுத்துகிறது. அரசியல்வாதியாக வரும் கீதா கைலாசம் ஏற்றுக் கொண்ட பச்சோந்தி கதாபாத்திரம் மற்றும் ராமர் பேசும் வசனங்களும் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. வீட்டில் வளர்க்கும் நாய் மின்சார வயர் அறுந்து இறக்கும் காட்சியிலிருந்து படம் கவனம் பெறுகிறது.
கார் பயிற்சி ஓட்டுநராகவரும் ஜார்ஜ் மரியனின் நடிப்பில் காமெடியும் ரசிக்கும் படியாக இருக்கிறது.
முடிவில் வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் காட்சியை பார்த்த போது மனம் ஏதோ பண்ணியது.
டூரிஸ்ட் பேமிலி படம் கூட சில காட்சிகள் எதார்த்தங்களை மீறி இருக்கும்.. ஆனால் இப்படம் அதிலிருந்து வேறுபட்டு இருக்கும்...
படத்தின் இடைவேளை முன்பு திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு இருந்தாலும் .... இடைவேளைக்கு பின் காட்சியை நகர்த்திய விதங்களில் படம் சுவாரஸ்யத்தைத் தருகிறது....
இயக்குநர் கார்த்திகேயன் மணி மற்றும்
படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....
தியேட்டர் கட்ட வில்லை என்றாலும் கனவுகள் உடனே நிறைவேறியது... ஆமாம்..
பெரம்பலூர் சுவாதி திரையரங்கில் நான் மனைவி மகன் மூன்று பேரும் மட்டுமே அமர்ந்து படத்தை கண்டுகளித்தோம்...பார்வையாளர்கள் வேறு யாரும் இல்லாத தியேட்டரில்







0 கருத்துகள்:
கருத்துரையிடுக