மெட்ராஸ் மேட்னி
அப்பா
அப்பா
அவனுடைய அப்பா கல்லூரியில் படிக்கும் போது அவன் வைத்த ஆறு அரியருக்காக முகத்தைச் சுருக்கிக் கொண்டு எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார்.
எப்படியோ அவனுக்கு ஞானம் வந்து அஞ்சு செமஸ்டர் கழித்து ஆறு அரியரை முடித்தான்.
'அண்ணன்களைப் போல் படிச்சு வேலைக்குப் போ' என எப்போதும் அவனை திட்டியதால் அவனுக்கு அப்பா எதிரியாகவே தெரிந்தார்.
ஒரு நல்ல நாளில் அண்ணன்களின் உதவியோடு அவன் கௌவர்மென்ட் வேலைக்குப் படிக்கத் தொடங்கினான்.
திட்டித் தீர்த்த அப்பா. பிள்ளை படிப்பதைப் பார்த்து 'இப்பதான் பிள்ளைக்கு புத்தி வந்திருக்கு 'எனத்
தனக்குத் தானே பேசிக்கொண்டார்.
கல்லூரியில் வேலை பார்த்த ஆசிரியர் யாரோ இவன் பேப்பரை திருத்தினார்களோ ?என்னவோ ?
வரிசையாக கௌவர்மென்ட் வேலைக்கு எழுதின எக்ஸம் நான்கும் போயிருச்சு.
என்னத்த படிச்சுக் கிழிச்ச? மீண்டும் அவனை திட்டத் தொடங்கினார். ஆனால் அம்மா ஆறுதல் சொன்னார்.
முட்டி மோதி படிச்சு அவனுக்கு கௌவரமெண்ட் வேலையும் கிடைத்தது.
அப்பா மகிழ்ச்சி அடைந்தார்.
'எம்பிள்ளை டா நீ . பின்ன பாஸ் பண்ண மாட்டியா?' என சட்டைக் காலரை தூக்கி விட்டுப் பெருமிதப் பட்டார்.
முதல் நாள் அலுவலகம் கிளம்பினான் அவன்.
டே !இங்க வா ? அதட்டலாக அழைத்தார் அப்பா.
பயங்கலந்த குரலில் 'என்னங்கப்பா' என்றான்.
'சட்டையக் கழட்டு. சுருங்கி இருக்குல்ல. தேச்சுப் போடுறதில்லையா ? 'என்றார்.
பொறுமையாக அயன் பாக்ஸை எடுத்து அப்பா தேய்த்த போது,
சட்டையின் சுருக்கத்தோடு அப்பாவின் முகத்திலும் சுருக்கம் போயிருந்தது.
ப.ராஜசேகர்.






